Sunday, December 15, 2013

ரிஷியின் பக்கம் - 2 .

ரிஷியின் பக்கம் - 2 12/15/2013 ஞாயிறு, ஹிக்ஸ்வில்ஸ், நியூயார்க்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே - திருமூலர்.

திருமூலரைப் பற்றி நான் சொல்லியா தெரிய வேண்டும் ? இவர் நரை, மூப்பு, திரை இன்றி பல்லாண்டுகள் வாழ்ந்து ஆண்டுக்கு ஒரு கவியாக 3000 கவிகளை எழுதியவர்.

உடலும் உடல் நலனும் ஒரு மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதவை. உடல் பரிபூரணத்துடன் நல் ஆரோக்கியத்துடன் இயங்கினால்தான் நீண்ட ஆயுள் கிட்டும். நீளாயுள் கிட்டினால் இறைநிலை அடையும் பணிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

மனிதன் கருவிற்குள் உருவாகும்பொழுது உருவ உடல் பொம்மையாகப் பரிணமிக்கிறான். ஒவ்வொரு மாதத்திலும் அந்த பொம்மையின் உருவ நிலையில் மாற்றம் கொள்கின்றது. 1 ஆம் மாதத்தில் ஒரு கோடு போல் நெடுக்குவாகாக 1 என்று உருமாற்றம் கொள்கின்றது. 2 ஆம் மாதத்தில் தலை வளர்கின்றது. இப்படி அந்த உருவ பொம்மைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தன் பரிமாற்றம் அடைந்து 10 ஆம் மாதத்தில் நில உலகை பார்வையிட வருகை புரிகின்றது. அந்த உருவ பொம்மைக்குள் உயிர் என்ற ஒன்று இன்றைய அறிவியலுக்கு புரியாத புதிராக நுழைகின்றது. உயிர் என்றால் என்ன ? மனம் என்றால் என்ன ? என்பதை இன்னும் நவீன அறிவியல் கண்டுபிடிக்க இயலவில்லை.

அறிவியலாளர்கள் மனம் என்பதை மூளையில் ஏற்படும் எண்ணங்கள் என்பதுடன் நிறுத்திவிடுகின்றனர். (மனோதத்துவத்தில் ஜாம்பவான்களான சிக்மண்ட் ஃப்ராய்ட், ஜங்க் மற்றும் சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த சமீபத்திய அறிஞர் டாக்டர் ரைன் (இவர் ட்யூக் பல்கலைக் கழகத்தில் மனத்தின் மீது பல்லாண்டுகளாக (சுமார் 25 வருடங்கள்) ஆராய்ச்சிகள் மேற்கண்டு முதன் முதலாக விஷுவலைசேஷன் என்ற ஒரு உத்தியினை அறிமுகப்படுத்தினார். இவர்களும் புறமனம், ஆழ்மனம் இத்துடன் நிறுத்திவிடுகின்றனர். மனம் என்றால் என்ன ? என்பதற்கு சித்தர்களைத் தவிர இதுவரை வேறு எவரும் சரிவர ஆராயவில்லையோ எனத் தோன்றுகின்றது. )

திருமூலர் தன் கவிகளில் பல இடங்களில் காலத்தை வென்று வாழும் முறைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

இந்தப் பாடலுக்கு உட்பொருள் விளக்கம் காண்போம்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

உடல் அழியின் உயிர் அழியும்.
உடல் அழிவது என்பது முற்றிலும் அழிந்துவிடுவது என்ற பொருளிலும் இன்னொரு பொருள் உடல்நலத்தில் குறை என்றும் கொள்ளலாம். அதாவது உடல் நலனில் முழுமையான உடல் நலன் இல்லாது வாழ்ந்தால் அந்த உடலில் குடியிருக்கும் உயிரானது மாசடைகின்றது எனப் பொருள். உயிர் மாசடைந்தால் தெளிந்த மனம் இரா. தெளிந்த மனம் இல்லையேல் தெளிந்த சிந்தனை இரா. தெளிந்த சிந்தனை இல்லையேல் மெய்ஞானம் / மெய்ப்பொருள் காண்பதறிது. இங்கே மெய்ப்பொருள் என்பது எல்லாவற்றையும் அதன் மூலமாய் பார்க்கக்கூடிய ஆற்றல் இல்லாது போதல்.

உதாரணமாக ஒரு கைப்பிடிச் சோறினைக் கையிலெடுத்தால் அது சோறாகக் காண்பது நாம் அனைவருக்கும் சாத்தியமானதே. ஆனால் தெளிந்த சிந்தனையில் சோறு மட்டும் தெரிவதில்லை... சோற்றின் மூலக்கூறுகளும் அதன் நுண் இயக்கங்களும் அதனுள் பொதிந்திருக்கும் மூலப்பொருட்களையும் கண்டுணருவதே மெய்ப்பொருள் என்பதாகும். எதையுமே அதன் மூலத்துடன் காண்பது. Fundamental Particlesஆகப் பார்ப்பது. புத்தர் சொல்வது போல் see as it is !

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே என்ற வரியில் உடம்பை வளர்த்தல் என்பது பாடி பில்டிங்கோ அல்லது கட்டான உடற்கட்டினை அமைப்பதோ அல்ல. உடலிலுள்ள செல்களை நாளும் வளர்த்தல் எனப் பொருள். உடலிலிருக்கும் ஒவ்வொரு செல்லிற்கு அறிவாட்சித்தரம் உள்ளது. இது ஜீவகாந்தமாக அமைந்துள்ளது, நேரடியாக வான்காந்தத்துடன் தொடர்பில் உள்ளது. இந்தத் தொடர்பு அறுபடும்பொழுதோ அல்லது மிகவும் பலவீனமாக இருக்கும்பொழுதோ உடலில் ஜீவகாந்த ஆற்றல் பலமிழக்கின்றது. தொடர்ந்து ஜீவகாந்தம் இழக்கப்பட்டு நோயில் முடிகின்றது. தொடர் நோய் மரணத்தில் முடிகின்றது.

ஆக செல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படவேண்டும். செல்களை வளர்க்கும் உபாயம் தெரிந்தால் துன்பங்களை வெல்லலாம் எனப் பொருள். செல்களை வளர்க்கும் உபாயம் அறிந்து உடலினை வளர்த்தேன் என்கின்றார் திருமூலர். அந்த உபாயத்தினை அறிந்த பின் உடல் கல்பமாகின்றது. விருத்தரும் பாலராகலாம் என்கிறது உட்பொருள்.

உயிர் வளர்த்தேனே ! என்ற வரியில் உயிர் வளர்ந்தால் மனம் வளரும். மனம் வளர்ந்தால் எல்லாம் வளரும். சுபிட்சமாய் வாழ்க்கைப் பயணத்தைக் கடக்கலாம் என்கின்றது பாடல்.

ஏனோ தெரியவில்லை எவருமே சித்தர்களின் பாடல்களுக்கு உண்மையான உட்பொருள் விளக்கம் சொல்லவில்லை என எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு நீண்ட வருத்தம் இருக்கின்றது.

சந்திப்போமா....

2 comments:

Unknown said...

Arumai!

வெங்கடேஷ் said...

அருமை. உயிர் காக்க உயிர் வளர்க நான் வேதாத்திரி சொன்னபடி காயகல்ப்ப பயிற்சி செய்யவும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்