Sunday, January 13, 2013

சித்தர் பாடல் –உட்பொருள் விளக்கம்



சித்தர் பாடல் –உட்பொருள் விளக்கம்

யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே
                               
-       திருமூலர்.

என்னுடைய பொழிப்புரை:

பொதுவாக எல்லா உரையாசிரியர்களுமே ‘அகர முதல எழுத்தெல்லாம்..’ என்ற குறளுக்கு இப்படி உரை எழுதுகின்றனர்.

’அனைத்திற்கும் காரணமான இறைவனை வணங்குவோமாக என்ற பொருள்பட வெவ்வேறு வார்த்தை ஜாலங்களில் எழுதுகின்றனர்.

சித்தர்களும் சரி , வள்ளுவரும் சரி இறைவனை வணங்க வேண்டும். இல்லாவிடில்..? ‘ என்று எங்கேயும் குறிப்பிடவில்லை..  

இந்தப் பாடலின் உட்பொருளானது,

முதல்வரி:
>>> யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை <<<

எல்லா உயிரிகளிலும் இருப்பது  (Universal Magnetism) எனப்படும் வான்காந்தமானது ஜீவகாந்தமாய் (Bio-Magnetism) தன்மாற்றமடைந்த பரிணமிப்பே  

பச்சிலை என்று குறிப்பிடுவது கவனிக்கப்படவேண்டும். காய்ந்த இலை அல்லது சருகு என்று திருமூலர் குறிப்பிடவில்லை.  காய்ந்த இலைகளில் ஜீவகாந்தம் இருப்பதில்லை.  அதாவது இலை மரணித்துவிட்டது. உயிர்களில் ஜீவகாந்தம் உள்ளது.

இறந்த இலையில் இறைவன் இல்லையா ? என நீங்கள் கேட்கலாம்.  எல்லாமே இறைத்துகள்களால் ஆனவை. இன்று விஞ்ஞானிகள் கூறும் Boson Particle அல்ல இறைத்துகள்.  அது அதற்கும் நுண்ணிய ஒன்று. இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை நம்மால்.  Fundamental Energy Particle. இதனையே நம் முன்னோர்கள் பரமாணு என்கின்றனர்.

அதாவது உயிருள்ளவைகளில் கண்டிப்பாக ஜீவகாந்தம் இருந்தே ஆகவேண்டும் என்பது முதல்வரியின் பொருள்.

”இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உயிரிகளுக்குமே ஜீவகாந்த ஆற்றல் இருக்கின்றது “ என ஒற்றை வரியில் உரை எழுதிடலாம்.

விளக்கம்::

முதலில் ஜீவகாந்தம் (Bio-Magnetism) என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.

ஒரு செடி வளர்கின்றது. துளிர்விட்டு நன்கு பசுமையாகக் காட்சியளிக்கின்றது. அதனைப் பாதியாகக் கத்திரித்துவிட்டு வேறு இடத்தில் நட்டு வைத்தால் அது பட்டுப் போகின்றதே ஏன்….?

அந்த இடத்தில் ஜீவகாந்தத்தில் வெட்டு ஏற்பட்டு ஜீவகாந்தம் இழக்கப்பட்டு மரணித்து விடுகின்றது.

இதே முறைதான் எல்லா உயிரினங்களுக்கும். ஒரு செல் அமீபாவாகட்டும்; டினோசராகட்டும். இதுதான் முறை. எப்பொழுது ஜீவகாந்தம் இழக்கப்படுகின்றதோ அப்பொழுது மரணம் சம்பவிக்கின்றது.

மைநோக்குவிசை (Centripetal Force) . மையவிலக்கு விசை (Centrifugal Force) தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டேயிருக்கின்றது உயிரினங்களில். மையவிலக்கு விசை அதிகமாகும்பொழுது மரணம் ஏற்படுகின்றது.

இங்கே பச்சிலை என திருமூலர் குறிப்பிடுவதை நாம் நினைவினில் கொள்ளவேண்டும். சருகு என்றோ அல்லது காய்ந்த இலை என்றோ அவர் குறிப்பிடவில்லை.

பசுமையில் ஜீவகாந்தம் அதிகம்; உயிரினங்களில் இளமையில் ஜீவகாந்தம் அதிகம். அதனால்தான் குழந்தையின் முகத்தில் ஒரு வசீகரம். அது செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு ஆகர்ஷ்ணம். அதனாலேயே குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்கின்றது.

முதல்வரியின் உட்பொருள் ‘ அனைத்து உயிர்களுக்கும் ஜீவகாந்தம் உள்ளது’.

எனவே உயிராற்றலை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்தால் 106 வயதிலும் இளமையாக இருக்கலாம்.

இனி இரண்டாவது வரிக்கு விளக்கம் பார்க்கலாம்.

>>> யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை <<<

இந்த வரி மிகவும் நுட்பமானது.

இங்கே ’யாவர்க்கும்’  என்பது மானிடர்களை மட்டுமே குறிப்பிடுகின்றார்.

பசுவினை இங்கே திருமூலர் குறிப்பிடக் காரணம் என்ன ? எத்தனையோ உயிரினங்கள் இருக்க திருமூலர் பசுவினை மட்டும் தனியாகக் சுட்டுவதேன் ?

பசுவின் உயிர்ச்சுழல் Clockwise Directionல் சுழல்கின்றது.  மனிதனின் உயிராற்றலும் இதே போல் கடிகார முள் சுற்றும் திசையிலேயே சுழல்கின்றது.

ஒவ்வொரு உயிரிகளுக்கும் உயிர்ச்சுழலானது ஒன்று கடிகார முள் சுற்றும் திசையில்  சுழலும் அல்லது எதிர் கடிகாரச்சுற்றில் உயிராற்றல் சுழலும் என்பது நியதி.

உதாரணமாக பன்றிக்கு எதிர்க்கடிகாரச் சுற்றில் உயிராற்றல் சுழல்கின்றது.

கடிகாரச்சுற்றில் உயிராற்றல் சுழலும் உயிரினங்கள்  எதிர்க்கடிகாரச்சுற்றில் உயிர்ச்சுழல் சுழலும் உயிரினங்கள் சந்திக்கும்பொழுது ஜீவகாந்த இழப்பு ஏற்படுகின்றது.

மனிதன் பன்றிக்கருகே செல்லும்பொழுது ஜீவகாந்த இழப்பு ஏற்படுகின்றது. பிணத்திற்கருகே செல்லும்பொழுது ஜீவகாந்த இழப்பு ஏற்படுகின்றது. Non-Veg என்றழைக்கப்படும் உணவுகளைச் சாப்பிடும்பொழுதும் இதுவே நிகழ்கின்றது.

சில சூழ்நிலைகளால் உயிராற்றல் கடிகாரச்சுற்றிற்கு எதிராக சுழல ஆரம்பித்தால், நாம் நம் ஜீவகாந்தத்தினைக் தற்காத்துக்கொள்ளக்கூடிய உபாயம் அறிந்திருக்கவேண்டும் என சித்தர்கள் மிகத் தெளிவாகச் சொல்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் அது எதிர்மறையாகச் சுழல ஆரம்பித்தால் ஜீவகாந்தம் இழக்கப்பட்டு இறுதியில் மரணத்தில் முடியும்

.>>> யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை <<<

அதிக ஜீவகாந்தம் கொண்டோர் தன் ஜீவகாந்தத்தினை நோயுற்றவர்களின் மீது பாய்ச்சி  நோய்களைக் குணப்படுத்த இயலும்.

ரிஷிகள் ஆசியளித்து நோய்கள் குணமாவதன் மர்மம் அங்கே ஜீவகாந்தப் பரிமாற்றமே. உடலில் நோய்கள் வர மூல காரணமே ஜீவகாந்த குறைவால் விளைவதே.

உடலில் கண்ணுக்குப் புலப்படா ஆராவில் முதலில் ஓட்டை விழும். அந்த ஓட்டையின் மூலம் ஜீவகாந்தம் லீக் ஆகிக்கொண்டே இருக்கும். பின்னர் அது எந்தப் பகுதியில் அதிகமாய் லீக் ஆகின்றதோ அந்த உறுப்பு நோய்வாய்ப்படுகின்றது.

அதனை தற்காலிகமாக வெளியிலிருந்து ரசாயணங்களை அனுப்பி நாம் சரிசெய்ய முயல்கின்றோம்.  துளை அடைபடாமல் போனால் வலி, நோய்யாகி .. நோய் ரணமாகி... பின்னர் நிரந்தர படுக்கை நோயாளியாகின்றான்.

ஜீவகாந்தம் லீக் ஆகும்பொழுது அதற்கு shield பண்ணக்கூடிய நுட்பம் தெரிந்துகொள் என்கின்றார் திருமூலர்.,

சித்தர்களின் பாடல்களிலும் திருக்குறளிலும் ஆழ்ந்த உட்பொருட்களடங்கியிருக்கின்றன. ஏனோ தெரியவில்லை யாருமே அதன் நுட்பமான நுட்பங்களை விளக்கி உரை எழுதவில்லை. அகர முதல் எழுதெல்லாம்...என்ற குறளுக்கு அனைத்திற்கும் மூலமான கடவுளை வணங்கு என்றே பொத்தாம் பொதுவாகச் சொல்வது எனக்கு மிகுந்த வருத்தத்தையே தருகின்றது.

இதேபோல் ஒரு முறை சித்தர்பாடல்கள் பொழிப்புரையுடன்... என்று ஒரு புத்தகம் திருவல்லிக்கேணி நடைபாதையில் கண்டெடுத்து ஆர்வமாகப் பிரித்துப் படித்தால்... என்ன சொல்ல...?

ஆடு பாம்பே... என்ற பாடலுக்கு... இந்த சித்தர் (பாம்பாட்டிச் சித்தர்)  பாம்புகளுடன் அதிக பரிச்சயம் உடையவர். இவர் பாம்புகளை ஆராய்ந்தவர். அதனுடன் விளையாடுவது இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று… இப்படி போகின்றது உரை. பாம்பாட்டிச் சித்தர் குறிப்பிடுவது குண்டலினி யோகம்.


>>>யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை <<<
கையுறை - கைக்கவசம், வழங்கி உதவு , any offering taken by one who goes to see a great personage , visiting presents .

இங்கே இப்படியும் பொருள் கொள்ளலாம்.


உன் ஜீவகாந்தம் இழக்காமல் தக்க பாதுகாப்பினை கைக்கொள் என்றும் கொள்ளலாம். உன்னிடம் இருக்கும் அதிகப்படியான ஜீவகாந்த ஆற்றலை தேவைப்படும் பிறருக்கு அளித்து உதவிடு என்றும் பொருள் கொள்ளலாம்.

ரிஷிகள் ஆசி வழங்குவது தங்களுடைய அதிகப்படியான ஜீவகாந்தத்தினை ஜீவகாந்தம் குறைவானவர்களுக்கு தங்களின் உள்ளங்கைகளின் மூலமும் கண் பார்வையின் மூலமும் அருள்கின்றனர். இதனையே அருள்பாலித்தல் என்கின்றனர்.


>>>>
யாவர்க்குமாம் உண்ணும்போது ஓர்கைப்பிடி <<<<<<<<<<
சித்தர்களின் வாழ்வியல் முறையில் இதுதான் மிகவும் சூட்சுமமான ஒன்று.


சித்தர்கள் சாப்பிடும் முன்னர் ஒரு கைப்பிடி உணவினை உள்ளங்கையில் வைத்து அதிலுள்ள ஆற்றலைத் தன் உடலிற்கு ஒத்துக்கொள்ளும்படியான ஜீவகாந்தமாக மாற்றும் ஒரு உத்தி.

ஒரு கைப்பிடி கவள உணவினை உள்ளங்கையில் வைத்தபடி மூலாதாரத்தில் இருக்கும் உயிராற்றலை உணவுடன் இணைத்து மூளைக்குச் செலுத்தி அங்கே பதங்கமாக்கிய பின்னர் உடலிலுள்ள அனைத்து செல்களிலும் அந்த உணவின் மீநுட்பமான ஆற்றலைப் பாய்ச்சும் ஒரு உத்தி.

இதனால் உடல் இளமை பெறும். முகம் தேஜஸ் ஆகும். உணவு உடலிற்கு ஊறு செய்யா.

>>>>>>>>>>
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே <<<<<<<<<<
முள்வைத்துக் குத்தினாலும் ஒரு முனிவர் (நிஜமான முனிவர்) சாபம் இடுவதில்லை.  மாறாகத் தன்னை துன்புறுத்தும் அந்த அன்பரை இறைநிலையிலிருந்து வாழ்த்துவர். நாமும் நம் அன்றாட வாழ்வினில் பிறரை வாழ்த்த வாழ்த்த எல்லாருமே நம்முடன் இசைவாகவே நட்பு பாராட்டுவர். அருட்கருணை பொங்கி வழியும். கோபம் வருவதில்லை.


வாழ்த்த  வேண்டுமெனில் வாய்விட்டு எல்லோருக்கும் கேட்கும்படியாக அல்ல; மனதிற்குள் வாழ்த்தினாலே போதும். அப்படி தொடர்ந்து வாழ்த்தும்பொழுது நம்மைச் சுற்றி அவரைப் பற்றிய நல்லெண்ணங்கள் மூளையிலுள்ள நியூரான்களால் Broadcast செய்யப்படும். இது அந்த நபரின் Sub-Concious Mindனுள் ஆழமாக அவரை அறியாதே உட்செலுத்தப்படும்.

மனோவியலில் Subliminal message என்ற ஒன்றினை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.  புறக்காரணிகள் எதுவும் இன்றி அடுத்தவரின் மனதினுள் நம் எண்ணங்களை விதைத்தல்.

பயணம்...



சிறுகதை: பயணம்... 
                                             
                                                           - ரிஷி ரவீந்திரன்

மருத்துவன் நாடி பார்த்துவிட்டு, ‘கிழவி அமாவாசை தாண்டாது’ என உறுதிபடுத்தினான். ஊரும் உறவும் வீட்டினில் குடிபுகுந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அவரவருக்குத் தெரிந்த கட்டுக் கதைகளை சுருதி கூட்டி சுவாரசியமாக அபிநயத்துடன் சொல்லிக்கொண்டிருந்தனர். கடந்த ஒரு வாரமாக தினமும் தாடி ராமசாமி மாமா ராமாயணம் பாராயணம் செய்துகொண்டிருந்தார். தேநீரும் உணவும் நேரம் தவறாமல் ஊர் உறவுகளுக்குக் கிடைத்தன. 

கடைப் பெண் தன் குழந்தைகளை வளர்க்க கிழவியை அழைத்துச் சென்றார். எல்லாம் நல்லபடியாய் போய்க்கொண்டிருந்த வேளையில்தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. வெளியே சென்றிருந்த தன் பெண்ணின் கணவர் வீடு திரும்பி, கதவினைத் தட்ட, பாட்டி வீட்டினுள்ளிருந்து கதவினைத் திறக்க முயல, தன் பெண்ணின் கணவர் எதிர்பாராவிதமாய் வெளியிலிருந்து கதவினை அதிக விசையுடன் தள்ள… கதவின் செவ்வக வடிவ இரும்பு தாழ் நெற்றிப் பொட்டிலடித்து, அடுத்த கணமே பார்வை கொஞ்சம் கொஞ்சமாய் மங்கியது. இரண்டொரு நாட்களில் முழு பார்வையும் பறிபோனது. மருத்துவமோ மின்சாரமோ பேருந்து வசதிகளோ இல்லாத காலங்கள் !

ஆரம்பத்தில் அனைவரும் இரக்கப்பட்டாலும் நாட்கள் நகர நகர பாட்டி அநாதரவானார். ’நடந்தால் நாடும் நட்பு.. படுத்தால் பாயும் பகை..’ என்ற யதார்த்தினை மெல்ல மெல்ல பாட்டி உணர்ந்தார். யெளவன காலத்தில் எலுமிச்சை நிறத்திலிருந்த தன் தோற்றம் இப்பொழுது எப்படி இருக்கும் ? கண்களிரண்டும் உள்ளே தள்ளி தான் அருவருப்பாய் இருப்போமோ?

ஒரு முறை உணவு உண்ண மறுத்த ஒரு பாப்பாவின் அன்னை, ’ நீ சாப்பிடாவிட்டால் கெழவியிடும் உன்னைப் புடிச்சிக் கொடுத்துவிடுவேன்’ என மிரட்டியது தன் காதுகளில் விழுந்தது. பாட்டிக்கு பாம்புக் காதுகள். தூரத்தில் வரும் சப்தத்தினை வைத்தே வருவது யார் எனக் கண்டுபிடிக்குமளவிற்கு செவித்திறனும் அறிவுத்திறனும் கூர்மையடைந்திருந்தது.

பாட்டிக்கு இரண்டு ஆண் இரண்டு பெண் குழந்தைகள். தீபாவளி, பொங்கலுக்கு வருடம் தவறாமல் முறை வைத்து பாட்டியின் குழந்தைகள் புத்தாடை அணிவித்தனர். பாட்டிக்குப் பணிவிடை செய்ய பூச்சம்மா என்ற ஒரு அநாதரவான பெண்மணியை நியமித்தனர். 

பேரக் குழந்தைகள் பள்ளி விடுமுறை நாட்களில் கிராமத்திற்கு வரும்பொழுது, பாட்டி ஒவ்வொரு குழந்தையையும் காரை வீட்டின் உச்சியில் பதிக்கப்பட்ட கண்ணாடியின் மூலமாய் ஊடுருவும் சூரிய ஒளியின் கீழே நிற்கச் செய்து, உச்சியிலிருந்து பாதம்வரைத் தடவி மகிழ்வார். பேரக் குழந்தைகள், பாட்டியின் உருவ அமைப்பினைக் கண்டு அஞ்சி நடுங்குவர். வெங்காயம் உரித்தல், யாராவது ஒருவர் மேற்பார்வையில் இட்லிக்கு மாவரைத்தல் எனத் தன்னால் இயன்ற எளிதான உதவிகளைச் செய்திடுவார்.

கடைப் பெண், சாங்கியத்திற்காகத் தனக்கு வாங்கிவந்த தின்பண்டங்களை, பாட்டி உண்மையான அன்போடு தன் பேரக் குழந்தைகளுக்கு பிரித்துக் கொடுப்பார். அதன் பின் பாட்டியின் முகத்தில் ஒரு மகிழ்ச்சித் தென்படும். பேரக் குழந்தைகளின் விடுமுறை முடியும்வரை பாட்டியின் முகத்தில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும். குழந்தைகள் தன் அருகே வராவிட்டாலும்கூட தன்னிடம் யாருமே உரையாடாவிட்டாலும்கூட பாட்டியின் மனதினில் எதோ ஒரு மகிழ்ச்சி குடியிருக்கும்.

பாட்டி, என்றுமே ’தன் நிலை இப்படி ஆகிவிட்டதே !’ என நினைத்து வருந்தியதே இல்லை.  கண் பார்வை இழந்த ஆரம்பத்தில் பாட்டிக்கு இரவு எது பகல் எது என நேரம் எதுவும் தெரியாமலிருந்தது. ஒரு நடைக் கம்பின் துணையோடு ஒவ்வொரு அடியினையும் ஆராய்ந்து பாதுகாப்புடன் எடுத்து வைத்து நடை பயின்றார். பெரும்பாலான நேரங்கள் தன் கடந்த கால வாழ்க்கையின் பசுமையான நினைவுகளை மனதினில் ஓட விட்டுப் பார்ப்பதால் பாட்டிக்கு நேரம் போவதே தெரியவில்லை. சலிப்பு ஏற்பட்டதில்லை. வானொலியோ தொலைக்காட்சியோ தொலைபேசியோ மின்சாரமோ இல்லாத காலங்கள் அவை.

பாட்டியைப் பராமரிக்கத் தனி கூரைவீடு. பரந்து விரிந்த மிகப்பெரிய பண்ணை வீட்டினில் ஒரு ஓரமாய் செவ்வக வடிவினில் சின்னதாய் ஒரு கூரைவீடு. நாரினால் வேயப்பட்ட ஒரு கட்டில். ஒரு லோட்டா. அலுமினிய சாப்பாட்டுத் தட்டு. மூக்குப் பொடி டப்பா. ’குரு’ பல்பொடி டப்பா. இதுதான் பாட்டியின் சொத்து.

நெற்றியில் வட்டமாய் சின்ன குங்குமப் பொட்டளவில் இயல்பாய் ஒரு மச்சம். வெள்ளைப் புடவையில் அவரது எலுமிச்சை நிறமும் சிவப்பு நிறத்தினில் நெற்றியில் நீண்ட ஒரு கோடாய் வைணவ சின்னமும் தரித்து பளிச் சென இருப்பார். 

நாலாயிர திவ்யபிரபந்தமாகட்டும், திருப்பாவையாகட்டும், ராமாயணமாகட்டும்… மடை திறந்த வெள்ளமாய் அவரிடமிருந்து கொட்டும். 

பாட்டியிடம் யாருமே பேச மாட்டார்கள். ரேஷன் வைத்து நாளொன்றிற்கு அதிகபட்சமாய் இரண்டொரு வார்த்தைகள். பணிவிடை செய்யும் பூச்சம்மா மட்டும் அவ்வப்பொழுது பாட்டியிடம் பேசுவார். வீட்டினில் வளர்த்த நாய் பூனை கோழிகள் பசுக்கள் இவைகளெல்லாம் பாட்டியிடம் ஒரு வகையான இணக்கமான புரிதலுடனும் பாசத்துடனும் இருந்தன. அவையவைகளின் பாஷையில் அவைகள் பாட்டியுடன் உரையாடும். யாவருக்கும் புரிபடாத எதோ ஒருவகை இணைப்பு அவைகள் பாட்டியிடம் கொண்டிருந்தன.

வேடிக்கை பார்க்க வந்த சிறார்களை, காகங்களை விரட்டுவது போல் பெரியவர்கள் விரட்டிக் கொண்டிருந்தனர். ’எடுபிடி வேலைகளுக்கு மட்டும் தங்களைப் பயன்படுத்திக் கொண்டு தேவையில்லாத சமயங்களில் தூக்கியெறியப்படுகின்றோமே’  என அவர்களின் மனதினுள் எண்ண அலைகள் மோதிக்கொண்டிருந்ததை பெரியவர்கள் யாரும் சட்டை செய்ததாய் தெரியவில்லை.

படுக்கையிலிருக்கும் கிழவி, பேச்சு வராமல் தன் கைகளால் அசைத்து எதோ ஒரு பாஷையில் என்னவோ ஒன்றை சொல்ல கிழவி யத்தனிக்கின்றது. ஒவ்வொருவரும் கிழவியின் உடல் மொழிக்கு ஒவ்வொரு அர்த்தங்களைக் கற்பிக்கின்றனர்.

‘பாட்டியின் ஆன்மா, லட்சுமியின் குழந்தைகளைப் பார்க்க ஏங்கித் தவிக்கின்றது. அதனால்தான் இன்னும் உயிர் பிரியவில்லை. உடனே லட்சுமிக்குத் தகவல் சொல்லி குழந்தைகளோட அழைச்சிட்டு வாங்க’ என்றார் டாங்கி அழகர்சாமி மாமா.

ஆளுக்கு ஒரு பக்கமாக ஊர் உறவுகளுக்குத் தகவல் சொல்லக் கிளம்பிக்கொண்டிருந்தனர். சீனிவாச மாமாவும், கணேசன் அண்ணனும் வெகு தொலைவிலிருக்கும் ஒரு அரசு பள்ளியொன்றில் பணியிலிருக்கும் .பாட்டியின் கடைப் பெண்ணிற்குத் தகவல் சொல்லக் கிளம்பினர். இருட்டடையும் முன்னரே சிவகாசி டெவுனுக்கு வேகமாய் நடை போட்டனர். அங்கிருந்து பஸ் பிடித்தால் லட்சுமி பணிபுரியும் ஊருக்கு இரவினில் சென்றுவிடலாம். இரவு ஏழு மணிக்கு ஒரு த்ரூ பஸ் இருக்கின்றது. கடைசி பஸ். விருதுநகர் சென்று அங்கிருந்து மேலும் பயணித்தால் அப்பயநாயக்கன்பட்டி.  த்ரூ பஸ் அங்கே சென்றடையும்பொழுது சுவர்க்கோழிகளும் ஆந்தைகளும் செயல்பட ஆரம்பித்திருக்கும்.

தாடி ராமசாமி மாமா பாட்டியின் மரணமடையக்கூடிய நேரத்தை எதிர்நோக்கி கவலையுற்றார். அடைப்பு நட்சத்திரத்தில் மரணித்தால் பிணத்தை வாசல் வழியாக எடுக்க இயலாதே !. தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் மரணித்தால், கூரையைப் பிரித்து அதன் வழியாகவோ அல்லது சுவற்றினை இடித்து அதன் வழியாகவோதான் பிணத்தினை எடுக்கவேண்டும் என்பது நியதி.

தனிஷ்டா பஞ்சமி என்றழைக்கப்படும் நட்சத்திரங்களில் ஏற்படும் மரணம் அடைப்பு ஆகிவிடுகின்றது. ஆவிமூலமாகவோ, கனவு மூலமாகவோ அல்லது ப்ரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி வீட்டிலுள்ளோர்களைப் பயமுறுத்தி ஆறு மாதத்திற்குள் மரணப்படுகையில் தள்ளிவிடும் என்றொரு ஐதீகம். முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்தி எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன என்றொரு நம்பிக்கை.

தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் மரணித்தவர்கள் எமலோகம் சென்றடைய இந்த அடைப்பு என்றழைக்கப்படுகின்ற கால அவகாசம் தேவைப்படுகின்றது என கருடபுராணம் உறுதிப்படுத்துகின்றதே ? மருத்துவன் நாடி பிடித்த கணக்கினை வைத்துக் கணித்தால், கிழவி பஞ்சமி நட்சத்திரத்தில்தான் மரணிப்பாரோ…? என்ன பரிகாரம் செய்வது…? என்ற எண்ணவோட்டம் தாடி ராமசாமி மாமாவின் மனதினில் பெளர்ணமி அலைகளாக ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தன.

ஊரின் எல்லையில் ப்ளஷர் காரின் ஹார்ன் சப்தம் கேட்டு சின்னஞ்சிறார்கள் வழியும் மூக்கினை இடக்கையால் வழித்துக்கொண்டு வலக்கையால் கீழிறங்கும் டவுசரை இழுத்துக்கொண்டே ஓடினர். பெரும்பாலான டவுசரின் பின்பக்கங்கள் இந்திய வரைபட வடிவினில் கிழிந்திருந்தன.

லட்சுமி தன் குடும்பத்துடன் வந்துவிட்டதாய் கூட்டம் அனுமானித்தது. பஜனை தாத்தா எதோ தயார் செய்ய கூடத்தினுள்ளே சென்றார். பாட்டி தன் காதுகளைக் கூர்மையாக்கினார்.

பேரக்குழந்தைகள் ஐவரும் ஆஜர்,  அந்த இடமே இப்பொழுது சாவுக்கலையிலிருந்து மங்களகரமாய் மாறியிருந்தது. உற்சாகமான அதிர்வலைகள் ஜனித்திருந்தன. பாட்டியின் முகத்தினில் ஒருவித பரவசநிலை.

ஒரு வயது நிரம்பாத கடைக்குட்டி வரதன் பாட்டியைக் கூர்மையாகப் பார்த்தான். பாட்டி இவன் பிறப்பதற்கு முன்பே பார்வை இழந்தவர், வரதன் முகத்தில் புன்னகை, ”யார்ரா…இது….?” எனத் தன் பிஞ்சுக் கரங்களினால் பாட்டியைத் தொட்டுச் சிரிக்கும்பொழுது பாட்டி மெய்சிலிர்த்துப் போனாள். பாட்டிக்கு முத்தம் கொடுத்ததில் ஆயிரம் வாட் மகிழ்ச்சி ரேகைகள் ஜனித்தன. பாட்டியின் உயிர் ஒரு வித லயத்தினில் ஆழ்ந்திருந்தது. இப்பொழுது முகத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் குடிகொண்டிருந்தது. ஆழ்ந்த மெளனங்களுக்கிடையே பாட்டிக்கும் வரதனுக்குமிடையே ஒரு ஆழ்ந்த உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. வரதனின் முகத்தினை பாட்டி காண இயலாவிடினும் மனதினுள் வரதனின் பிம்பம் ஓடிக்கொண்டிருந்தது. வசீகரமான முகம். உயிரினை சுண்டி இழுக்கும் ஜீவகலையான ஒரு சிரிப்பு. பாட்டியின் கைகளிலிருந்த ரப்பர் வளையல்களைப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தான். தன் கையில் கட்டியிருந்த காப்புடன் அதனை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான்.

மூத்தபேத்தி ரங்கநாயகிக்கு எதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகின்றது என்ற அனுமானம் ஏற்படுகின்றது. முகத்தில் சோகம் மெல்ல மெல்லக் கவிழ்ந்து பிஞ்சு முகம் இறுகியது.

பஜனை தாத்தா கூடத்திலிருந்து ஒரு தம்ளரில் பாலுடன் பிரவேசமானார். லட்சுமியின் முகம் நோக்கினார். உணர்வலைகள். ’உன் அம்மா மரணமடையப் போகின்றார்’ என்று மனதின் மூலம் உணர்வலைகளினால் லட்சுமியுடன் உரையாடினார். மெளனமாய் ’கடவுளே என் தாய் மரணிக்கவேண்டாம்…” என லட்சுமியின் கண்களில் நீர்த்திவலைகள் ஜனித்தன.

பஜனை தாத்தா பால் தம்ளரினை மூத்த பேத்தி ரங்கநாயகியின் கையில் திணித்து பாட்டியின் வாயில் பால் மெதுவாக ஊற்றும்படி செய்வித்தார். பால் டம்ளரிலிருந்து சீராக பாட்டியின் வாயில் விழுந்துகொண்டிருந்தது. பாட்டியின் உயிர் ஒரு வித லயத்தினில் இசைவாய் உணர்ந்தது. பாலின் அளவும் வேகமும் சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பித்தது. பாட்டியின் உயிரும் சிறிது சிறிதாக உடலினை விட்டு அமைதியாகப் பிரிந்து கொண்டிருந்தது.

பஜனை தாத்தா, தாடி ராமசாமி மாமா அனைவரும் கண்களை மூடி பாட்டியின் உயிர் பிரிவதினை மனதினால் உணர்ந்து கொண்டிருந்தனர், சோகம் அப்பியிருந்தது.

நன்றி: வல்லமை மின்னிதழ்.
http://www.vallamai.com/special/pongal/1878/