Wednesday, November 28, 2012

Life Of Pi – ஒரு மீள்பார்வை



Life Of Pi ஒரு மீள்பார்வை


நேற்று நான் என்  சக நண்பர்களுடன் அருகிலிருக்கும்  திரையரங்கிற்குச் சென்று Life Of Pi காணச்சென்றேன். இதோ என் மீள்பார்வை.

சமீப காலங்களில் என் அபிமான இயக்குனர் அகிர குரசவாவின் பல உத்திகளை பல இயக்குனர்கள் தங்கள் படங்களில்  கையாண்டு தொடர்ந்து வெற்றியடைந்து கொண்டேவருவது அகிர குரசவாவின் வெற்றியே. Life of Pi என்ற இந்தத் திரைப்படத்திலும் அகிர குரசவாவின் Circular Techniqueஐப் பயன்படுத்தியிருக்கின்றார் இயக்குனர் ஆங் லீ.

படம், கதை சொல்லியின் பார்வையிலிருந்து நகர ஆரம்பிக்கின்றது.

கண்ணே ! கண்மணியே !என்ற பாடலுடன் தொடங்குகின்றது. Mychael Dannaவின் இசை லயமாய் இருக்கின்றது. கடல் பயணம் ஆரம்பிக்கும் வரை நிகழும் நிகழ்வுகள் பாண்டிச்சேரியில். ஆனால் அதுவரை நம் கலாச்சாரத்தினை முடிந்த அளவிற்கு இயக்குனர் படம் பிடித்துக்காட்டியிருக்கின்றார்.

கதாநாயகனின் பால்யபருவம். புதுச்சேரியில் வாசம். தந்தை மிருகக்காட்சி சாலை ஒன்றினை சொந்தமாக நிறுவினார். அவனது இயற்பெயரான Piscine Molitor Patel ஐ சக மாணவர்கள் கேலியும் கிண்டலுமாக அழைக்க தன் பெயரினை Pi என்றே அனைவரிடமும் விளிக்கிறான்.

சிறுவனுக்கு ஆன்மீகத்தில் நாட்டம். இந்துமதம் பிடிக்கின்றது. ஒரு முறை கிறித்தவ மதம். இன்னொரு முறை இஸ்லாம் என அனைத்து மதங்களுமே அவனைக் கவர்கின்றது. சிறுவனின் தந்தை, ‘நீ அப்படி எல்லா மதங்களையும் பின்பற்ற முடியாது…”

ஏன்…..?”  பை.

நீ ஒரு மதத்தினைப் பின்பற்றிக்கொண்டு இன்னொரு மதத்தினையும் பின்பற்றினால் முதலில் பின்பற்றிய மதத்தின் மீது நீ கொண்டிருக்கும் நம்பிக்கையையே அது சந்தேகப்படும்படியாகும்…”

அவன் சிறுவன்தானே…? அவனது தேடல் இப்பொழுதுதானே ஆரம்பித்திருக்கின்றதுதேடட்டும் இப்பொழுது அவனை சாப்பிட விடுங்கள்….” சிறுவனின் தாய் தபு.


ஒரு முறை தன் மிருகக்காட்சி சாலையில் புலிக்குத் தன் கையாலேயே உணவு தர முயற்சிக்கின்றான். சுவர்க்கூண்டிற்குள் அடைபட்டிருக்கும் புலி மெல்ல மெல்ல சிறுவனை நோக்கி வருகின்றது.  சிறுவனின் அண்ணன் எச்சரிக்கின்றான். புலியிடமும் அன்பு காட்ட முயல்கின்றான் சிறுவன். அண்ணன் அவ்விடத்தைவிட்டு அகன்று தந்தையை அழைத்துவருகின்றான்.

புலி இவனை எதோ ஒருவித கரிசனத்தில் பார்க்கின்றது. கம்பிகளின் வழியே சிறுவனின் கரத்திலிருக்கும் இறைச்சித் துண்டினை வாங்க முயலும்பொழுது தந்தை ஓடிவந்து புலியை விரட்டுகின்றார்.

புலியின் அடிப்படை குணம் கொல்வதுஅது கார்னிவெல்...உன் அன்பு அதற்குப் புரியாது… ’

ஆனால் அதன் கண்களின் அதன் ஆத்மாவைக் கண்டேனே டாடி….’ இந்த வசனம் க்ளாசிக்கலாக இருந்தது.

இதோ பார்…’ என ஒரு ஆட்டினைக் அங்கே கட்டிவைக்கபுலி ஆட்டினை ஒரே பாய்ச்சலாகக் கவ்வி ….

சிறுவன் இந்து மதத்தைச் சார்ந்தவன். சிறுவனுக்கு ஜீவகாருண்யத்தின் பால் அதிக நாட்டம். சுத்த மரக்கறி உண்பவனாய் இருக்கின்றான். தன் பதினாறாவது வயதினில் ஆனந்தியாக வரும் Shravanthi Sainath என்ற தன் வயதொத்த பெண்ணுடன் காதல் உணர்வுகள்.

சாப்பிடும்பொழுது தந்தை, மிருகக்காட்சி சாலையை நிரந்தரமாய் மூடிவிட்டு இந்த ஊரைக் காலிசெய்துவிட்டு வேறு நாட்டிற்குச் சென்று குடும்பத்துடன் வசிக்கப்போவதாய் அறிவிக்கின்றார்.

ஏன்…?’ என சிறுவன்.

கொலம்பஸ் போல வேற நாட்டைக் காணக் கெளம்பறோம்…”

கொலம்பஸ்ஸே இந்தியாவைத்தானே தேடினார்….?” சிறுவனின் இந்த பதில் செம்மட்டியாய் விழுந்தது.

கடல் பயணம் ஆரம்பம். கடல் புயலில் சிக்கி விபத்திற்குள்ளாகின்றது. இங்குதான் கதையே ஆரம்பிக்கின்றது. படம் முழுதும் தனியொரு மனிதனாய் எப்படி உயிர் பிழைக்கின்றான் என்ற போராட்டமே கதை.  இவனுக்குத் துணையாக இவனுடன்  நான்கு விலங்குகளும் உயிர்காக்கும் படகில் பயணிக்கின்றன. இறுதியில் பெங்கால் டைகரும்நம் கதாநாயகன் மட்டுமே உயிருடன்.

புலிக்கும் இவனுக்கும் ஒருவிதப் புரிதல். புலியுடன் தகவல் பரிமாற்றம் செய்யக் கற்றுக்கொள்கின்றான். எப்படியும் உயிர் பிழைப்போம் எனத் தனக்குத்தானே நம்பிக்கை ஊட்டிக்கொள்கின்றான். மீன் பிடிக்கும் கலையைக் கற்கின்றான். பசி ஒரு வெஜிட்டேரியனை நான் வெஜிட்டேரியனாய் மாற்றும் அந்தத் தருணம் அருமை. ஒவ்வொரு வெஜிட்டேரியனின் மனதினையும் மனதினுள் நடக்கும் போராட்டங்களையும் அழகாய் படம் பிடித்துக்காட்டுகின்றார்.

சோர்வில் தூங்கிவிடுகின்றான். படகும் இவன் தூங்கும் மரப்பலகைப் படுகையும் ஒரு தீவில் தட்டி நிற்கின்றது. அது ஒரு மிதக்கும் தீவு,  அங்கே தாவர உணவினை உண்கின்றான். சுத்தமான குடிநீருள்ள சிறிதாக ஒரு குளம். பாலூட்டி வகையைச் சேர்ந்த Mangoose குடும்பத்தைச் சேர்ந்த Meerkat வகை சின்ன சின்ன உயிரினங்கள். இரவினில் நீர் அமிலமாக மாறி, மீண்டும் பகலில் சுத்த நீராக மாறும் விந்தை.  ஒரு முறை மனிதப் பல்லினைக் கண்ணுறுகின்றான். அங்கிருக்கும் சில தாவரங்கள் விலங்கின்ங்களை உண்ணக்கூடிய ட்ரொஸீரா வகைத் தாவரங்கள் என அறிகின்றான். உடனே அந்தத் தீவைவிட்டு அகல்கின்றான் தன் புலியுடன்.

உயிர்காக்கும் படகு மெக்ஸிகோ கடற்கரையில் ஒதுங்குகின்றது. புலி இறங்கி அருகிலிருக்கும் காட்டிற்குள் நுழைகின்றது.  சிறுவன் சோர்வாகக் கரையிலேயே விழுந்து கிடக்கின்றான். பொதுமக்கள் அவனைத் தூக்கிக்கொண்டுச் செல்கின்றனர். அவன் ஓவென அழ ஆரம்பிக்கின்றான்.  புலியைவிட்டுப் பிரியும் அந்த வலி யாருக்கும் புரிபடவில்லை.

காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் இவனை விசாரிக்கின்றனர். இவன் நடந்த உண்மைகளைச் சொல்கின்றான். அதிகாரிகள் நம்ப மறுக்கின்றனர். மிரட்டும் தொணியில் பேசுகின்றனர்.

சிறுவன் அவர்கள் நம்பும்விதமாக இதே சம்பவங்களை வைத்து இன்னொரு கதையைச் சித்தரிக்கின்றான். அதிகாரிகள் இப்பொழுது நம்புகின்றனர்.

இந்தப் படம் 2000ல் வெளிவந்த CAST AWAY என்ற திரைப்படத்தினை ஏனோ நினைவுபடுத்துகின்றது.

இந்தப்படம் Yann Martel என்ற கனடா தேசத்து எழுத்தாளரால் Life Of Pi என்ற நாவல் எழுதி, பல முறை பதிப்பாளர்கள் நிராகரித்து இறுதியில் செப்டம்பர் 2001ல் Random House Canadaவினால் வெளியிடப்பட்டு பல பரிசுகளை அள்ளியது. UK பதிப்பு Man Booker Prize for Fiction என்ற விருதினை அள்ளியது.  South African Award, மற்றும் Asian/Pacific American Award for Literature போன்ற பல விருதுகளை அள்ளிய ஒரு நாவல்.


No comments: